கவிதை – Page 2 – www.worldpoetess.com
    Loading...

    உறவில் அவ்வியம் விஷம்

    நட்பில் துரோகம் விஷம்

    நிறத்தில் பேதம் விஷம்

    அகத்தில் அழுக்காறு விஷம்

    ஆதிக்கத்தில் ஆணவம் விஷம்

    நாத்திகமாய் இழித்தல் விஷம்

    ஊனம் நகைத்தல் விஷம்

    கொடுமைக் கண் மெளனம் விஷம்

    எளியோர் மேல் வலிமை விஷம்

    மற்றவர் திறன் களவு விஷம்

    நமக்குள் ஆண்டாண்டாய்

    ஊறிய ஆலகாலம் பல

    வேரோடு அகழ்ந்து களையாவிடில்

    விரைவாய் தன் சிதை

    தான் மூட்டும் அறிவிலிகளாகுவோம்!

    ~நளினி சுந்தரராஜன்.

    ஓடிவா ஓடிவா

    எங்கே எங்கே

    அதோ பார்

    அங்கே அங்கே!

    அருணனும்

    வருணனும்

    நேரெதிர் சந்தித்த 

    கொண்டாட்டமோ

    முகில் இழை கோர்த்து

    விண் பட்டாடையில்

    வண்ண ஜரிகைத்

    தைத்தனரோ?

    வளைவின் முடிவில்

    பொன் பானையுண்டாம்

    பொத்திக் காக்கும்

    சித்திரக் குள்ளனுண்டாம்

    புள்ளினம் மகிழும்

    முல்லை நிலமுண்டாம்

    ஓற்றைக் கொம்பு

    வெண் புரவியுண்டாம்

    பிணி போக்கும்

    அமுதசுரபி ஊற்றுண்டாம்

    வில் மறையும் முன்

    இன்னும் நூறு

    மாயக் கதைகள்

    பேசி மகிழ்ந்திட

    அறுபதுங் கூட

    ஆறாய் மாறிக் களித்திட

    அவ்வப்போது

    வாழ்வில்

    வேண்டும்

    வானவில்!

                           ~நளினி சுந்தரராஜன்.

    ஒலிக்கு மனதில் 

    ஒர் ஒளியுருவம்

    விழித் திறப்பை

    ஒத்தி வைக்கச் சொல்லும்

    நொடி நீண்டு

    யுகமாகக் கெஞ்சும்

    அட்சர ஸ்ருதியில்

    லயமாய்க் கரைந்து

    மீண்டும் மீண்டும்

    மூழ்கத் தூண்டும்

    மிகப் பிடித்தப் 

    பாடல் என்றென்றும்

    ரசித்தல் இனிது!

                                       ~நளினி சுந்தரராஜன்.

    ஒருவரும் சீண்டியதில்லை…

    ஏச்சுபேச்சுக்கள் தாண்டி,

     அன்பை உணரும் வார்த்தைகள் அறிந்ததில்லை…

    நித்தமும் சூட்டப்படும் புதுபெயர்களுக்குள், 

    தேள்கொட்டிய வாழ்க்கை…

    சிரிப்பைத் தவிர, 

    வேறொன்றும் எங்கள் கழிவிரக்கமில்லை..

    ஏங்கிய மொத்த அன்பையும் ஒரு நொடியில் உணர்ந்தேன்,

    ஒரு சிறு பாலகன் என் விரல் பிடித்து  “அக்கா” என்று உரிமையோடு அழைத்ததில்…

    ஊசிபோடும் வார்த்தைகளுக்கு மத்தியில்,

    எங்கோ நான் துழாவி கிடைத்த கரிசனம்…

    மெய்யாய் சிலிர்த்து, சிரிக்கிறது என் மனம்…

    உறவுகளும், உண்மை உரிமையும் மட்டுமே சகமனிதனிடம் நாங்கள் வேண்டுவது…

    இப்படிக்கு ஒரு திருநங்கையின் தேடல்…

    -ராஜி பிரேமா ❤️

    ஊரடங்கில் உல்லாசம் கொள்ளும் உடமை மானிட…

    உண்டுவிட்டு உறங்கியது போதும் உடனே விழித்தெழு…

    இங்கே மின்மயானச் சுவர்களெல்லாம் மிரளுகின்றன…

    சுடுகாட்டு புதைகுழிகள் புலம்புகின்றன…

    வெட்டியானின் ஆயுதங்கள் அலறுகின்றன…

    ஒரு புறம் இந்நிலையென்றால் மறுபுறமோ

    சாலைவாசிகளை பசிக்கொடுமை வதைக்கின்றன..

    தினக்கூலிகள் வருமானமின்றி தவிக்கின்றனர்…

    உயிரினங்கள் உணவின்றி அலைகின்றன…

    இறப்புகளும் இழப்புகளும் இணைந்து வாட்ட

    முன்களப் பணியாளர் முந்திவந்து முனைப்பு காட்ட

    நீ மட்டும் உறங்கியது போதும்

    உள்ளபொருள் ஒவ்வொன்றையும் உற்றவருக்களி…

    தீநுண்மி தீண்டாமலிருக்க தீனியளி..

    தற்காத்து கொள்வதோடு தன்னினங்காத்திடு…

    உயிர்காக்க உயிர்வளி அளித்திடு…

    கல்லா மாந்தருக்கு காக்கும்முறை கற்றுக்கொடு…

    இழப்பைக் கண்டும் இரங்காது இருக்கின்றாயே..

    இன்னிலை தகர்க்க அகக்கண் இச்சையழித்து ஈகையளிக்க இசைந்து வா இந்நொடியே வா இருக்கும் உயிர் காத்திட

    ஈரைந்து திங்கள் தவக்கரு சுமந்து

    கூரைவேயா இல்லில் அரணாய் நின்று

    புரையொன்றை கடிந்தே விளக்கி நானொளிர

    அரை உயிராய் தானுருகும் மெழுகவள்…

    உற்றதோர் துணையை இழந்த பின்பும்

    பெற்றதோர் பிள்ளையின் துன்பம் எண்ணி

    அற்றே கலங்காமல் அகங்காத்து தரங்குறையா

    பொற்றொத்து மங்காது மிளிரும் மெய்மையவள்…

    நடை பயின்ற நாட்களிலே நேர்ந்த

    தடையொன்றால் தவறி நான் விழுந்தால்

    படைதிரட்டி தரைப்போர் செய்து வெற்றி

    நடையோடு திரும்பிடும் வீர மங்கையவள்…

    அழுக்கூடையோடு அரைவயிறு கூழுண்ட போதிலும்

    அழுதொன்று கேட்டு நின்றால் அப்பொருள்

    பொழுது சாயும்முன் விழிகாட்டி மகிழ்வூட்டும்

    தொழுகின்ற தெய்வ வம்சத்தின் வரமவள்…

    விதி தந்திட்ட வினைகளை துமியாக்கி

    அதிகாலை வேளையில் ஆகாரம் செய்வித்து

    மதிமுகம் பெற்றிட கல்விச் சாலையனுப்பி

    சதியழித்து சாதித்த சரித்திர நாயகியவள்…

    பாரமென எண்ணும் தன்மை உணர்ந்தென்

    தாரமவள் தருகின்ற இன்னல் மறைத்து

    சாராப் பண்போடு என்னலமோங்க இக்கணம்

    ஓரமாய் ஒதுங்கி வாழ்த்தும் தாய்மையவள்.

    தொலைந்திட 

    வேண்டும்

    காட்டுக்குள்ளே

    தொலைந்திட 

    வேண்டும்

    திசைக்கு சூரியன்

    வழிக்கு விண்மீன்

    குடிக்கத் தேன் சுனை

    புசிக்க மலைக் கனி!

    அடைந்திட அணில் பொந்து

    தூளியாட நெடு விருட்சம்

    அயர்ந்திட புல் படுக்கை

    ரசித்திட பால் வெளி!

    ஆடிக் களிக்க மயிலும் ஆனையும்

    பேசிச் சிரிக்க கிளியும் குருவியும்

    தாவிக் குதிக்க மந்தியும் மானும்

    பயந்து பதுங்க புலியும் கரடியும்!

    வண்டுகள் மீட்டும் ரீங்காரம்

    நீர்த் தவளை கூட்டும் சிறு நாதம்

    சர சரக்கும் சர்ப்பமொடு

    மயக்கும் குயிலின் தேவ கானம்!

    ஈரச் சருகின் சுகந்தம்

    நிசப்தத்தின் ஏகாந்தம்

    இறை நிகர் பரவசம்

    யாவருக்கும் வழங்கும் ஓரிடம்!

    வாழ்வின் சுழற்சியில்

    தொலைந்த நமை மீட்க

    சிரமேறிய கனமிறக்கி

    கவலை யாவும் மறக்க

    ஓர் நாளேனும்

    தொலைந்திட 

    வேண்டும்

    காட்டுக்குள்ளே

    தொலைந்திட 

    வேண்டும்…!

    ~நளினி சுந்தரராஜன்.

    கண்ணீர்

    திட்டினாலும்

    வருகிறது

    கொஞ்சினாலும்

    வருகிறது

    பிறர் துன்பத்திலும்

    வருகிறது

    தனக்கு என்ற

    போதிலும்

    வருகிறது

    எப்போதும் நிறைத்து

    வைத்திருக்கும்

    பொதுவுடமைக் கிணறு…

    பொதிமூட்டையைச்

    சுமக்கும் மனதிற்கு

    ஆறுதல் பரிசு….

    மனக்கரைசலை

    முகர்த்துக்கொண்டு

    வரும் முகிலின் சாயல்…

    தூதுஇலக்கியத்தில்

    இதுவும் ஒருவகை…

    மனதின் ஓலைக்கு

    மறுஓலை தந்துவிடும்

    கண்ணீராய்

    ஈரத்தில் அன்பு,இரக்கம்

    பரிதவிப்பு,ஆற்றாமை,

    இயலாமை அத்தனை

    மலர்களும் மலர்ந்துவிடும்

    வலி நிவாரணியாய்

    வந்து செல்கிறது

    வலி குறைந்தபாடியில்லை

    கண்ணீரும் குறைந்தபாடியில்லை

    மன இளகிகளுக்கு…

    ஓவென்று கத்தி

    ஒருநாள்

    தீர்த்துவிடவேண்டும்

    தீர்ந்து விடுமா வேதனைக்கிணறு

    உள்ளக் கிணற்றில்

    மிச்சமுள்ள

    நீரெல்லாம்

    மற்றவர் வடிக்க

    விட்டுச்சென்ற கண்ணீரா?

    தீர்த்துவிடவேண்டும்

    என்றுசொன்னாலும்

    தீர்வாய் விழிக்கரையில்

    ஒற்றைக்காலை

    நீட்டியக்கொக்காய் மனமீனைப்

    பிடிக்க துணைவரும்

    மயில்தோகையாய்

    வருடும் இக் கண்ணீருக்கு

    மனச்சான்று அதிகமாகவே உண்டு

    பிறக்கும் போது தொடங்கி

    இறப்பில் முடியும்

    இவ் இலக்கியத்திற்கு உரையாசிரியர்

    அவரவரே

    உரை எழுதி தீர்ந்தப்பாடியில்லை

    தொடர்கிறது ….

    ஆறுதல் தரவந்த

    கண்ணீர் இலக்கியம்

    செ.புனிதஜோதி

    மனிதன் மாறிவிட்டான்

    அன்றே சொன்னீர்

    தீர்க்கதரிசனமாய்

    கண்ணதாசரே….

    மனிதன்மாறிவிட்டான்

    ஆம்

    மாறித்தான் விட்டான்

    இன்னும் கொஞ்சம்

    சுயநலமாய்

    இன்னும் கொஞ்சம்

    மதத்திலும்

    இன்னும் கொஞ்சம்

    அறிவிலும்

    அவன் கண்ட மாற்றத்தைக்

    கண்டு அஞ்சிவிடாதே

    இன்றும் பாட்டை எழுதிவிட்டுப்

    போ …

    திருந்தட்டும்

    திருட்டு உலகம்

    சொல்கிறேன் கேள்

    ஆக்கமாய் எண்ணி

    அழிவின் பாதையில்

    பிணங்களாய் மாறிப்

    பணத்தோடு குடும்பம்

    நடத்த மாறிவிட்டான்

    இலக்காய் நோக்குவது

    இலக்கங்களை எண்ணுவதே

    அறிவியல் முதிர்ச்சியில்

    வீட்டைத் தீவாய்

    மாற்றித் தொ(ல்)லைபேசியை

    உறவாய் ஆக்கிக்கொண்டான்

    வளைதளம் வலைவிரிக்குது

    வாலிபக்கூட்டத்தை

    பள்ளிக்கூடத்திலும் காமலீலைகள்

    குருக்களின் தலைமையில்

    எட்டி நிற்கும் வானமாய்

    உறவுகளைத் தள்ளிவைத்து

    ஒட்டாமலே இளைய தலைமுறைகளை

    மாற்றிவிட்டான்

    அண்டைவீட்டுக்காரன்

    எட்டிப்பார்க்க முடியா

    எட்டு மைல் தூரத்தில்

    கால்களில் சக்கரத்தைக்

    கட்டிக் கொண்டு பறக்கின்றான்

    சாலையில்

    செத்துக்கிடந்ததாலும் எட்டிப்பார்க்க வருவதில்லை

    சுயநலநலத்தில் சுருங்கிக்

    கிடக்குது மானுடம்

    நாக்கின் சுவை அரும்புகள்

    கலப்படத்திற்கு அடமானம்

    வைத்து

    மருத்துவமனைக்கு வட்டி

    கட்ட மனிதன் மாறிவிட்டான்

    மனிதநேயம் பெயரில்

    ரொட்டித்துண்டை வீசி

    விளம்பரப்பிரியனாய்

    மாறிவிட்டான்

    குடிநீரைக் காசாய் மாற்றி

    குளத்தை அழிக்கும்

    வியாபாரத் திமிங்கலமாய்

    மாறிவிட்டான்

    விளைநிலமெல்லாம்

    விலைநிலமாய்…

    கட்டிடத்தையும்,

    பணத்தையும்

    உண்டுவாழ திட்டம்இடுவதாய்

    ஐ.நாசபை அறிவிப்பு

    எதுவுமில்லாதவர்களுக்கு

    தூக்குக்கயிறு

    உரம் மருந்து

    முன்னறிவிப்பு ஏதுமின்றியே

    விடைபெறும் வியர்வைக்கூட்டங்கள்

    மனிதம் மறந்த

    மானுடக்கூட்டம்

    இருப்பதற்கு இறந்து

    போகலாம் நீயே

    சொல்லிவிடுவாய்

    இயற்கையை அழித்துச்

    செயற்கையோடு வாழ்வதே

    அறச்சிந்தனையாய் எண்ணும்

    பரிசோதனைக்கூடத்து

    வித்தாய் மனிதன் மாறிவிட்டான்

    பகுத்தறிவுப் பெயரில்

    திருமணமில்லா வாழ்க்கை

    தந்தையில்லா குழந்தைகளின்

    அணிவகுப்பு

    மாற்றமும் இவனோடு

    வேள்வி செய்கிறது

    மனிதனாய் மாறச்சொல்லி

    இயற்கையும் வீட்டுச்சிறைக்குள்ளே

    பூட்டி வைத்து விளையாடுகிறது

    இன்னும் மாறவில்லை

    மனிதன்

    இனிமேலும் மாறுவானா ?

    நீயே தீர்க்கதரிசனத்தில்

    சொல்லிவிட வந்துவிடு

    கண்ணதாசனே.

    செ.புனிதஜோதி

    மனமெல்லாம் வருடும்

    மணிகுயிலின்

    ஓசை!!!

    அதுபோல

    உந்தன் குரலை

    என்னோடு துணைக்கு

    அனுப்பிய

    தூதுவனே!!!

    திக்கெற்றக்

    காட்டில்

    திசை மாறும்

    பொழுதெல்லாம்

    வழிக்காட்டியாய்

    வரும்

    மின்மினிப்பூச்சியின்

    பின்னச்சிறகின்

    ஒளிரும் ஒளியாய்

    வருவாயே!!!

    கரடுமுரடான

    பாதையில்

    அடிமேல்அடி எடுத்து

    வைக்கப் பாதசுவடாய்

    என் மனதோடு நிலைப்பாயே!!!

    அஞ்சி நிற்கும்

    வேளையிலும்

    அஞ்சாமல் இருக்க

    கம்பு சுத்தும்

    உன் ஆட்டத்தை

    என் நெஞ்சோடு வீரமாய்

    பதித்தாயே!!!

    கணக்கு போட

    திரணியத்துக்கிடக்கையில்

    மாகாணி,அரைக்காணி

    கணக்குப்பாடத்தை

    என் நெஞ்சோடுப் புதைத்தாயே!!!

    சோம்பலான நேரம்

    சோம்பித் திரியேல்

    ஒளவையார் பாடலை

    உன் சீர்காழி குரலில்

    பரிசாகத் தந்தாயே!!!

    என் வழித்துணைக்கு

    நீர் விட்ட விதையின்

    விருட்சத்தில் நிழலாய்

    வாழ்கின்றேன்

    உந்தன் மணிக்குயில்

    அப்பா….

    Pin It on Pinterest