கட்டுரை – www.worldpoetess.com
    Loading...

     

    நூல்

    பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்

    ஆசிரியர்

    :  ஈரோடு தமிழன்பன்

    பதிப்பகம்

    :  விழிகள், சென்னை

    மொத்தப் பக்கங்கள்

    :  196

    விலை

    :  ரூ 160/-

    மறு பதிப்பு

    :  2020

     

    வழக்கமாக நூலாசிரியரின் உரை “முன்னுரை”, “என்னுரை”, “முகவுரை” என்ற தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் இருக்கும். ஆனால், இந்த நூலில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் தம் உரைக்கு “கதவுரை” என்று புதுமையாகத் தலைப்பிட்டிருப்பதே தனித்துவமான தொடக்கமாக உள்ளது. பாவேந்தரோடு மட்டுமின்றி, அவருக்குப்பின் அவரது கொள்ளுப்பேரன், பேத்திகள் வரை இன்றும் பாவேந்தர் குடும்பத்துடன் தமிழன்பன் அவர்களுக்குத் தொடர்பு இருப்பதைக் கதவுரை நமக்கு அறிவிக்கிறது. முனைவர் வ. ஜெயதேவனின் “பாட்டு இடையிட்ட உரைநடைக் காப்பியம்” என்ற தலைப்பில் அணிந்துரை, பேராசிரியர் சி. அ. சங்கரநாராயணனின் “பாரதியார்… பாரதிதாசன்… தமிழன்பன்” என்ற தலைப்பில் வாழ்த்துரை, விழிகள் திரு. தி. நடராசனின் பதிப்புரை, தமிழன்பன் அவர்களின் 87ஆவது பிறந்த நாள் பரிசுப்பதிப்பாக இந்த நூலைப் பதிப்பித்துள்ள நியூயார்க் வாழ் சண்முகம் பெரியசாமியின் நன்றியுரை, “உங்களுக்காகப் பழைய நினைவுப் பதிவு”, “அறிஞர்கள் பார்வையில் தமிழன்பன்” எனப் பல அம்சங்கள் நூலின் வரவேற்புத் தோரண வாயில்களாக அணிவகுத்து, வாசகர்களை முழுவீச்சில் இப்புத்தகத்தைப் படிக்க ஊக்குவிக்கின்றன.  

     

    பாவேந்தருடன் தாம் பழகிய அனுபவங்களை 36 அத்தியாயங்களாக அமைத்துள்ளார் தமிழன்பன்.  பல அத்தியாயங்களில், முடிவுச் செய்தியை அந்தந்த அத்தியாயங்களின் இறுதியில் தராமல், அதன் தொடர்ச்சியை அடுத்த அத்தியாயத்தில் தந்திருக்கிறார். புத்தகத்தைத் தொடர்ந்து ஆர்வமுடன் வாசிக்க வாசகர்களைத் தூண்டும் இந்த புதுமையான உத்தியை  – வளரிளம் படைப்பாளிகள் கவனத்தில் கொள்ளலாம்!   

     

    1954இல் தமிழன்பன் கரந்தைப் புலவர் கல்லூரியில் மாணவர். அந்தச் சமயத்தில் கல்லூரி   ஆண்டுவிழாவிற்குத் தலைமை தாங்க, “ஆண்ட நாள் ஆண்ட பாண்டிய மன்னன் மீண்டது போல்” வந்திருந்த பாவேந்தரின் “முரட்டு முகத்தின்” அறிமுகம் கிடைத்ததைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார். கல்லூரிப் பேராசிரியர் இராமநாதன், “புரட்சிக் கவிஞருக்குப் பக்கத்தில் இரு! புரட்சிக் கவிஞர் தேவை தெரிந்து நிறைவு செய்” என்று கூறியதும், “மின்மினியைத் துரத்திக் கொண்டிருந்தவனிடம் நட்சத்திரங்களை அள்ளிக் கையில் போட்டது போலாயிற்று” என்று விவரிக்கிறார் தமிழன்பன். அவர், பாவேந்தர் பேச்சைக் குறிப்பெடுத்து, தமிழ்ப்பொழில் – மார்ச் 1954 ஏட்டில், “அகமகிழ் விழா” என்ற தலைப்பில் எழுதிய நிகழ்ச்சித் தொகுப்பு, பாவேந்தரின் பாராட்டைப் பெற்றிருக்கிறது. அந்த ஏட்டின் அசல் புகைப்படம் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது சிறப்பு.

     

    நூலாசிரியர் கதவுரையில் குறிப்பிட்டது போல், கரந்தைத் தமிழ்ச் சங்க விழாவில் கிடைத்த அறிமுகத்துக்குப் பின், தமிழன்பன் ஈரோட்டில் மதராசா பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போதும், தொடர்ந்து பத்து ஆண்டுகள் சிதம்பரம், தஞ்சை, ஈரோடு, சென்னை போன்ற நகரங்களில் பாவேந்தரைச் சந்தித்துப் பழகி இருக்கிறார். ராசிபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் பாவேந்தரின் தமிழாற்றல், கவிதை மேதைமை, தமிழின உணர்ச்சி, பாரதி நேயம், அழகியல் ஈடுபாடு ஆகியவற்றோடு, அவரது கனிந்த மனம், விருந்தோம்பல், வெகுளி, இசை ஞானம், அங்கதம், மறதி, பிடித்த உணவு வகைகள் போன்றவற்றையும் இந்நூலில் சுவைபட விளக்கி இருக்கிறார் ஆசிரியர்.

     

    கவிதைகளிலோ கட்டுரைகளிலோ பிழை கண்டால் தழலாவது பாரதிதாசனின் இயல்பு என்றும் கடுங்கோபம் இல்லாமல் கனிவோடு திருத்தங்கள் செய்கிற நேரத்தில், அவர் கையில் பிரம்புக்கு பதிலாக மயிலிறகு இருப்பது போல் தோன்றும்என்றும் குறிப்பிடுகிறார் ஆசிரியர். ஒரு சமயம் பாரதிதாசன், “நான் செத்துவிட்ட பிறகு இப்படிப் பிழையெல்லாம் திருத்துவதற்கு ஆள் இல்லை என்று நினைக்கிறபோது – என் பிள்ளை செத்துப்போனால் எப்படி வருத்தப்படுவேனோ, அப்படி வருத்தப்படுகிறேன்” என்று கூறியது ஆசிரியரைக் கலங்க வைத்துவிட்டிருக்கிறது. தீர்க்கதரிசனமான பாவேந்தருடைய ஆழ்ந்த கவலை, மிக நியாயமானது என்பதை நூலை வாசிக்கும் ஒவ்வொரு வாசகரையும் நெகிழ்ச்சியுடன்   உணர வைக்கிறது.

     

    பாரதிதாசனின் தோற்றத்தையும், முதிர்ந்த குரல் கடுமையையும் கருதி, அவர் பாடினால், “இடியின் கைகளில் ஒரு புல்லாங்குழல் கொடுத்தது போல், புயலின் கையில் மாலை தொடுக்கப் பூக்கள் கொடுத்தது போல்” இருக்கும் என்று முதலில் நினைத்திருந்த ஆசிரியர், அவர் சில சமயங்களில் பாடகர்களுக்கே பாடிக்காட்டிச் சரி செய்த சம்பவங்களைக் குறிப்பிடுகிறார்.

     

    “உன்னிடம் நல்ல தமிழ் ஆளுமை இருக்கிறது. உபயோகப்படுத்தினால் கதை. கவிதை எதை வேண்டுமானாலும் செய்து வெற்றி பெற முடியும்” என்று தமிழன்பன் அவர்களை ஊக்கப்படுத்தி, அவரது “நெஞ்சின் நிழல்” என்ற புதினத்தைப் பதிப்பிக்கப் பாரி நிலையத்தாருக்கு அவரை நேரடியாக அழைத்துச் சென்று பரிந்துரை செய்திருக்கிறார் பாவேந்தர். பாரதிதாசன் மேல் தமிழன்பனுக்கு  இருந்த பற்றையும், தமிழன்பன்பால் பாரதிதாசனுக்கு இருந்த கட்டற்ற பாசத்தையும் வெளிப்படுத்தும் பற்பல முத்தாய்ப்பான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று! என்னே பெரிய ஏமாற்றம்….. அந்நூல் நூல் வெளியாவதற்கு முன்பே பாவேந்தர் மறைந்தது, நூலாசிரியருக்கு எவ்வளவு மனவருத்தத்தை அளித்திருக்கும் என்பதை உணரமுடிகிறது.

     

    “தான் வாழ வேண்டும் என்று மழை நினைப்பதில்லை; தான் வளர வேண்டும் என்று மண் விரும்புவதில்லை; தான் விண் தொட வேண்டும் என்று விதை ஆசைப்படுவதில்லை”- என்று தமிழாசை தவிர வேறு ஆசைகள் இல்லாது வாழ்ந்த பாரதிதாசனின் இதயத்திலும், “விமானப் பயணம் செய்ய வேண்டும், வெளிநாடுகள் பார்க்க வேண்டும்” என்ற சில விருப்பங்களும் இருக்கத்தான் செய்திருக்கின்றன. “கண் மூடும் வரை இவ்வெண்ணங்கள் அவருக்குக் கைகூடவே இல்லை… அவருக்கு மட்டுமா இழப்பு? அவர் கவிதைகளுக்கு இழப்பு. தமிழ் இலக்கியத்துக்கு இழப்பு. அயல்நாடுகளுக்குச் சென்றிருந்தால் காவியங்களில் தம் பயணங்களைக் காலங்காலமாய் வாழச் செய்திருப்பாரே!” என்று ஆசிரியர் ஆதங்கப்படுவதைப் போல வாசகர்களுக்கும் இவ்வுணர்வு ஏற்படும் என்பதில் ஐயமில்லை. “அவரது பாண்டியன் பரிசு படமாகவில்லை; பாரதியார் வாழ்வு படமாகவில்லை. அவரது நிறைவேறாக் கனவுகளை இன்று நினைத்தாலும் ஏக்கமே பெருகுகிறது” என்றும் தமிழன்பன் நெகிழ்கிறார்.

     

    பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், காரைக்குடி திரு. சா. கணேசன், திரு. பெரியசாமி தூரன் ஆகியோரின் பரிந்துரையில் பாவேந்தருக்கு ஞானபீடப் பரிசு கிடைத்திருக்க வேண்டும். இப்பரிந்துரை பற்றிய செய்தியைக் கேட்ட பாவேந்தர், ஆசிரியரிடம், “இதில் வரும் ஒரு இலட்ச ரூபாயில் வீட்டுக்கு அரைப்படி பருப்பு வாங்கிப் போடுவேன்னு நினைக்கிறாயா? அதெல்லாம் ஒன்றும் நடக்காது. பெரிய அச்சு இயந்திரம் வாங்கிப் போட்டு, உன் கவிதை, உன்னைப் போல எழுதுகிற அவன் கவிதை, இவன் கவிதை எல்லாம் புத்தகங்களாகச் சுட சுட அச்சிட்டுப் போட்டால் தமிழ்ப்பகை தன்னாலே ஒழிஞ்சு போகும்” என்று கூறியிருக்கிறார். இவ்வுரையாடல் செய்தி மூலம் பாரதிதாசன் தமிழின் நினைவாகவே, தமிழாகவே வாழ்ந்திருக்கிறார் என்பதை வாசகர்கள் உணர இயலும்! ஆனால், பரிசு கிடைப்பதற்கு முன்பே அவரது மறைவு ஏற்பட, “ஞானபீடப் பரிசு மலையாளக் கவிஞருக்குச் சென்றபோது, தன் மகனுக்கு அது கிடைக்காமல் போயிற்றே என்ற கவலை தமிழ்த்தாய் விழிகளில் அருவியாகக் கொட்டியது” என்று ஆசிரியர் உருக்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

     

    அன்றைய காலகட்டத்தில் பாவேந்தருக்கு இருந்த அரசியல் தொடர்புகள், கொள்கைகள் மேல் அவரது சமகால அறிஞர்கள் மற்றும் பல்வேறு அரசியல் இயக்கத் தலைவர்களுக்கு, பல்வேறு மாற்றுக் கருத்துக்கள் இருந்த போதும், பாவேந்தரின் ஆழ்ந்த தமிழ்ப்பற்று, புலமை மற்றும் அவரது எழுத்தின்பால் அவர்கள் உயர்ந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர் என்பதை நூலின் பல்வேறு அத்தியாயங்களில் அறிந்து கொள்ள முடிகிறது. தம் அரசியல் செல்வாக்கைத் தம் சொந்த நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ளாத பாவேந்தரின் உயரிய பண்புகள் போற்றத்தக்கவை.

     

    பாரதியாருடன் பத்தாண்டுகள் பழகியவர் பாரதிதாசன். பாரதிதாசனுடன் பத்தாண்டுகள் பழகியவர் ஈரோடு தமிழன்பன். இவரது அனுபவக்கோர்வையாக அமைந்துள்ள இப்புத்தகம் நம்மையும் பாரதிதாசன் காலத்துக்கு அழைத்துச் செல்கிறது.

     

    முதற்பதிப்புக்கு 2001இல் பேராசிரியர் அ. மா. பரிமணம் அவர்கள் எழுதிய கருத்துரை, பாவேந்தர் தம் கைப்பட ஆசிரியருக்கு எழுதிய கடிதங்கள், வண்ணப்படங்கள் போன்றவைகளின் சேர்க்கைகள் நூலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன.  எண்ணற்ற கவித்துவமான வர்ணனைகள்- உவமைகள், புதிய சொல்லாட்சிகள் நூல் முழுவதும் விரவிப் பெருகி, மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், வளரிளம் படைப்பாளிகளுக்கும் விருந்து படைக்கின்றன. 

     

    நூலைப் படித்த பிறகு, அன்றைய கவி ஆளுமை பாரதிதாசன், இன்றைய கவிஆளுமை  தமிழன்பன் ஆகிய இருவருக்குமிடையே உள்ள பாசப்பிணைப்பைப் பற்றி வாசகர்கள் மனதில் ஏற்படும் பிரமிப்பான உணர்வை,  புத்தகத்தின் பின் அட்டையில் உள்ள தமிழன்பன் கவிதை வரிகள் மிகப் பொருத்தமாக எதிரொலிக்கின்றன. பாரதிதாசனோடு தாமும்  பயணித்த உணர்வு இந்த நூலைப் படிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை .

     

    ஈரோடு தமிழன்பன் அவர்களின் “பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்” தமிழ் கூறும் நல்லுலகிற்கு மேலும் ஓர் அணிகலன். வாசகர்களின் வாசிப்புப் பசிக்கு ஒரு பல்சுவை இலக்கிய விருந்து!!   


    “ஓதற் கெளிதா யுணர்த்தற் கரிதாகி
     வேதப் பொருளாய் மிகவிளங்கித் – தீதற்றோர்
     உள்ளுதொ றுள்ளுதொ றுள்ள முருக்குமே
     வள்ளுவர் வாய்மொழி மாண்பு”

    என மாங்குடி மருதனார் திருக்குறளின் புகழை  மனதார வாழ்த்தியுள்ளார். எக்காலம் வாழ்ந்தாலும் மனிதன் அக்காலத்திலும் தவறுகள் செய்துகொண்டே இருப்பான் என்பதற்கு, நாம் வள்ளுவரைக் கற்கும் போதும், நாம் வாழுகின்ற அநுபவங்களை உற்று நோக்கும்போது உணரக்கூடியதாக இருக்கின்றது. திருக்குறளைப் புரிந்து கொண்டு எம்மிடமுள்ள   அழுக்குகளை அகற்ற, கற்பதற்கு இலகுவாகவும் கருத்தில் கொள்வதற்கு எளிமையாகவும் இருக்கும் திருக்குறளை கற்கவேண்டிய அவசியம் எமக்கு இருக்கின்றது. 
                     
    ஆரம்பத்தில் எழுத்தாணியால் ஏட்டிலே எழுதப்பட்ட திருக்குறளின் தாய் நான்தான் என்று வள்ளுவர் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. எனது மொழி தமிழ்மொழிதான் என்று எந்த இடத்திலும் வரிகளால் வடிக்கவில்லை. திருக்குறள் என்று பெயர் கூட வைக்கவில்லை. முப்பால் என்றே ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. பின் குறள் வெண்பாவால் எழுதப்பட்டதனால் குறள் எனப்பட்டு, அதன் சிறப்பு நோக்கி திரு என அடைமொழி கொடுக்கப்பட்டு திருக்குறள் எனப்பட்டது. வள்ளுவர் தன் நூலில் எந்த இடத்திலும் தமிழ் என்றோ கடவுள் என்றோ ஒரு இடத்திலும் எழுதவில்லை. ஒரு கடவுளின் பெயர் கூட அதில் எழுதி வைக்கவில்லை.
     
    திருக்குறள் பிறரைச் சென்றடைவதற்கு முதற்காரணமானவர் ஒளவையாரே. தமிழச்சங்கத்திலே திருக்குறள் அரங்கேற ஒளவையாரே சிபாரிசு பண்ணி அரங்கேறச் செய்தார். 
     
     
    “தேவர் குறளும் திரு நான்மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும்
     கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என்றுணர்”
     
            என்று அவரே திருக்குறளின் பெருமையைப் பாராட்டியுள்ளார். 
     
              அதன்பின்தான் புலவர்கள் போற்றினர். ஆனால், 1812 ஆம் ஆண்டுதான் முதன்முதல் திருக்குறள் அச்சிடப்பட்டது. அதுவே உலகெங்குமுள்ள மக்களைச் சென்றடைவதற்குக் காரணமானது. ஆனால் வள்ளுவரை நாம் இனம்காணக் காரணமானவர்கள் உரையாசிரியர்களே அவர்கள் இல்லையென்றால், திருக்குறளைத் துளிகூடப் புரிந்து கொள்ளமுடியாமல் போயிருக்கும். எனவே வள்ளுவருக்குக் கொடுக்கும் அதே அந்தஸ்தை உரையாசிரியர்களுக்கும் நாம் கொடுக்கவேண்டியது அவசியமாகின்றது. அதுவே காலமாற்றத்திற்கேற்ப புரிந்து கொள்ளும்படியாக அமைவதே சிறப்பாகின்றது. 
     
                     திருக்குறளை எழுத்தெண்ணிப் படிக்கும்போது அதன் பொருள் மனதுள் அடங்கி மனதைத் திருத்தும் பணியைச் செய்கின்றது. எழுத்தெண்ணிப் படித்தல் என்னும் போது திருக்குறள் 1330 குறள்களால் எழுதப்பட்டது. மொத்த சொற்கள் 14,000. மொத்த எழுத்துக்கள் 42,194. அதிகாரங்கள் 133. அறத்துப்பாலிலுள்ள குறள்பாக்கள் 380. பொருள்பாலிலுள்ள குறள்பாக்கள் 700. காமத்துப்பாலில் 250. னி என்ற எழுத்துத்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 1705 தடவைகள். ஒள என்ற எழுத்து வரவில்லை. தமிழ் எழுத்துக்கள் 247 இல்,37 எழுத்துக்கள் இடம்பெறவில்லை. அனிச்சம், குவளை என்னும் மலர்களும் நெருஞ்சிப்பழம் என்னும் ஒரு பழமும் குன்றிமணி என்னும் ஒரு விதையும், பனை, மூங்கில் என்று இரு மரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் கோடி என்னும் சொல் ஏழு இடங்களிம், ஏழு என்னும் சொல் எட்டுக் குறள்களிலும் இடம்பெற்றுள்ளது( தகவல்- இணையம்)  என்று எழுத்தை எண்ணிப் படிப்பதில்லை. அதில் வந்திருக்கின்ற எழுத்துக்களை எண்ணிப் பார்த்தல் அதாவது நினைத்துப் பார்த்துப் படிக்க வேண்டும். 
     
                
               உதாரணமாக “அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” எழுத்துக்களெல்லாம் அகரம் முதலாக உள்ளது. அதுபோல் உயிர்களுக்கெல்லாம் இறைவன் முதலாக இருக்கின்றார். என்னும் போது இங்கு யாராவது எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் முதல் என்பதை எண்ணிப்பார்த்து அதாவது நினைத்துப் பார்த்து எழுத்துக்களுக்கெல்லாம் முதலாவது அகரம் என்று எப்படிச் சொல்லமுடியும் என்று எண்ணிப் பார்க்கும்போது தமிழ் எழுத்துக்களுக்கு   முதலாக அகரம் இருப்பது போல் என்று விளங்கிக் கொள்ளமுடியும் வள்ளுவரும் வெற்றிகொள்வார்.
     
                      திருக்குறள் ஒரு வாழ்வியல் கூறும் இலக்கியம். வாழ்வியலை உணர்வு ரீதியாகப் புரிந்து கொள்ள முடியவில்லையென்றால் திருக்குறளைப் படிப்பதில் பயனே இல்லை. 
            
                வள்ளுவரின் இந்த தற்புகழ்ச்சி இல்லாத பண்பே அவரின் நூலை   உலகப் பொதுமறையாக கொண்டுவந்திருக்கிறது. கடவுள் மனிதனுக்கு சொன்னது கீதை மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள் என்னும் அந்தஸ்தைப் பெற்றிருக்கின்றது. 26 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வள்ளுவர் தனது நூலென்று எழுதாததற்கு அவரது தற்புகழ்ச்சி அற்ற பண்பே காரணமாகின்றது. அவரே ஓரிடத்தில் சொல்கின்றார். தற்புகழ்ச்சி தற்கொலைக்குச் சமம் என்று. அர்ச்சுனன் போர்க்களத்தில் வில் கூட்டத் தயங்கிக் கொண்டிருந்த போது இவ்வாறு என் உறவுகளைக் கொல்வதை விட நான் தற்கொலை செய்துவிடுவேன் என்று கூறினானாம். அப்போது  கிருஸ்ண பரமாத்மா அர்ச்சுனா! உன்னை நீ புகழ் என்றாராம். அப்போது அர்ச்சுனர் என்னை நான் புகழ்தல் ஒரு பண்பல்ல என்றாராம். அப்போது பறவாயில்லை உன் வில்லைப்பற்றி புகழ் உன் வீரத்தைப் பற்றிப் புகழ் என்றாராம். அவனும் புகழ்ந்தானாம். அப்போது கிருஸணர் சரி நீ தற்கொலை செய்துவிட்டாய் இப்போது போருக்குத் தயாராகு என்றாராம். (தகவல்- இணையம்) எனவே தற்புகழ்ச்சி தற்கொலைக்குச் சமம். ஆனால், இப்போது என்ன நடக்கிறது. தாமே தம்மைப்பற்றி புகழ்வது மட்டுமல்ல, தாம் பொய்யாகத் தம்மைப் புகழ்கின்றார்கள் என்று பிறர் அறிவது கூடத் தெரியாது புகழ்வார்கள். எனவே நாம் வாழுகின்ற வாழ்க்கையில் எதனை எடுத்துப் பார்த்தாலும் திருக்குறள் அதில் எமக்குப் பாடம் கற்பிக்கும். 
     
    மற்றவர்களுக்கு நன்மை செய்வது பற்றி கூறியிருக்கின்றார். 
     
    “நல்லாற்றல் உள்ளும் தவறுஉண்டு  அவரவர் 
    பண்புஅறிந்து ஆற்றாக் கடை”
     
    நாம் யாருக்கு நன்மை செய்கின்றோம் என்று தெரிந்து கொண்டு பணியாற்று என்கின்றார்.  அதாவது
      
                      “உதவி உதவி வரைத்தன்று உதவி
                       செயப்பட்டார் சால்பின் வரைத்து ”
     
     
              மூன்றடியால் உலகளந்தார் வாமன அவதாரத்தில் விஷ்ணு, (மாபலிச்சக்கரவர்த்தி கதை) இந்த இரண்டடியால் உலகளந்தார் வள்ளுவர். அதனால்தான்  பண்பற்ற ஒருவனுக்கு இரண்டு கொடுக்க வேண்டும் என்கிறேன். அந்த இரண்டுதான் இந்தத் திருக்குறள். எங்கள் முப்பாட்டனை வளருகின்ற எங்கள் சமுதாயம் மறக்காமல் இருக்க, முதுமொழியாம் எங்கள் தமிழ் மொழி என்பதற்கு ஆதாரமாய் விளங்கும் திருக்குறளை போற்றி வாழ்வோம். அள்ள அள்ளக்குறையாத அட்சய பாத்திரமாம் இந்நூலை ஆழ்ந்து ஆழ்ந்து ஆராய்ந்து ஆராய்ந்து அநுபவிப்போம்.  

    Pin It on Pinterest